செய்திகள்
300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்- சந்திரசேகரன் எம்எல்ஏ வழங்கினார்
கொல்லிமலை ஒன்றியத்தில் 300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, முட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்களை சந்திரசேகரன் எம்எல்ஏ வழங்கினார்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருப்புளிநாடு ஊராட்சி வால்குழிபட்டி, வாழவந்திநாடு எல்லைகிராய்பட்டி, வலப்பூர்நாடு ஊராட்சி அரப்பளஸ்வரர் கோவில் ஆகிய 3 கிராமங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் சேந்தமங்கலம் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அப்பகுதிக்கு சென்று அங்குள்ள 300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, முட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், வால்குழிபட்டி கிராம மக்கள் சுமார் 5 கி.மீட்டர் சென்று பெரியகோம்பையில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். அவர்களுக்காக வால்குழிபட்டியில் ரேஷன் கடை கட்டிதரப்படும் என்றும், அங்குள்ள சாலைகளை ரூ.2½ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் என்றும், அரப்பளஸ்வரர் கோவிலில் குடிநீர் வசதிக்காக எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பைப்லைன் விரிவாக்க பணிகள் நடத்தப்படும் என்றார்.
இதில் கொல்லிமலை ஒன்றிய சேர்மன் மாதேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் பிரகாசம், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, லட்சுமி நடேசன், ராஜமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருப்புளிநாடு செல்வம், தின்னனூர்நாடு ஜெகதீசன், குண்டளிநாடு சுப்ரமணி, யுவராஜ் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.