செய்திகள்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும்- திருமாவளவன் கோரிக்கை
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டி தர கோரி கேரள அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், தேயிலை தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு கேரள அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டி தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.