செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-08-08 07:24 GMT   |   Update On 2020-08-08 07:24 GMT
அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் உள் கர்நாடகா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதிலும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 58 செ.மீ. மழை கொட்டியது.

அதன் தொடர்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மற்றும் கூடலூரில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடருகிறது. கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34, பந்தலூரில் 19, ஹாரிசனில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News