செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 12ந்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்- அண்ணா பல்கலைக்கழகம்

Published On 2020-08-08 01:51 GMT   |   Update On 2020-08-08 01:51 GMT
என்ஜினீயரிங் கல்லூரிகளில் வருகிற 12-ந்தேதி முதல் ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடங்கும் என்றும், நவம்பர் 9-ந்தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் மத்திய-மாநில அரசுகள் ‘ஆன்லைன்’ வகுப்புகளை ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தனியார் பள்ளி-கல்லூரிகள் ஏற்கனவே ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தனக்கு கீழ் இயங்கும் என்ஜினீயரிங் இணைப்பு கல்லூரிகளில் (தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகள்) வகுப்புகள் தொடங்குவது குறித்தும், அதற்கான கல்வி அட்டவணையையும் வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி படிப்புகளுக்கான மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை (முதல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற 12-ந்தேதி தொடங்கி, அக்டோபர் 26-ந்தேதியுடன் நிறைவு பெறும். இதற்கிடையில் வரும் 8 சனிக்கிழமைகளும் பணி நேரமாக இருக்கும். அந்தவகையில் ஒரு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் இருக்கும்.

ஆகஸ்டு-நவம்பரில் மதிப்பீட்டு அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். கோட்பாடு, செய்முறை தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை வெளியிடும் அட்டவணையை பின்பற்றவேண்டும். அக்டோபர் 28-ந்தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கும். அதேபோல், இறுதி செமஸ்டர் தேர்வு நவம்பர் 9-ந்தேதி தொடங்கி நடைபெறும். அதன்பின்னர், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 14-ந்தேதி தொடங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த முடியும் என்றும், ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கும்போது நேரடி வகுப்புகள் இதே அட்டவணைப்படி நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News