செய்திகள்
சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய 3 டிராக்டர், மினி லாரி பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய 3 டிராக்டர் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் சூரக்கோட்டை கோவில் குட்டை உள்ளது. இங்கிருந்து இரவு நேரங்களில் சட்டு மண் அனுமதியின்றி கடத்தி செல்வதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 டிராக்டர் மற்றும் ஒரு மினி லாரியில் சுமார் 15 டன் சட்டு மண்ணை ஏற்றி கொண்டு வாகனங்கள் கிளம்பியது.
அந்த சமயம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 4 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு தாசில்தார் ஜானகி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனங்களில் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததன் அடிப்படையில் மண் அள்ளப்பட்டதாக கூறப்படுவதால் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.