செய்திகள்
தற்கொலை

வெளிநாடு செல்ல முடியாததால் விரக்தி- தெலுங்கானா தம்பதி தற்கொலை

Published On 2020-08-07 10:14 GMT   |   Update On 2020-08-07 10:14 GMT
வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில், கொடைக்கானல் அருகே தெலுங்கானா தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
கொடைக்கானல்:

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் போஜெட்லா கோபிகிருஷ்ணன் (வயது 25). இவரது மனைவி எபூரி நந்தினி (25). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பேரும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஆவர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்கள் 2 பேரும், கொடைக்கானல் அருகே உள்ள அட்டுவம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் வீடு, சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது ஆகும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கடந்த சில மாதங்களாக அவர்கள் வெளியூர் செல்லாமல் கொடைக்கானலிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி வரை அவர்கள் தங்கியிருந்த வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, போஜெட்லா கோபிகிருஷ்ணனும், எபூரி நந்தினியும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல் அருகே விஷமருந்து பாட்டிலும், தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த கடிதமும் இருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்கள், எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் ஆஸ்திரேலியா செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதற்கிடையே பெற்றோரிடம், ஆஸ்திரேலியா செல்வதாக கூறி கொடைக்கானலில் யாருக்கும் தெரியாமல் தங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா செல்ல முடியாத விரக்தியில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News