செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே லாரி மீது கார் மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் பலி
காவேரிப்பட்டணம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
காவேரிப்பட்டணம்:
திருப்பூர் மாவட்டம் காசிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக, பீகார் மாநிலத்திலிருந்து அம்புஜ்குமார் (வயது 23), உமேஷ்சாகினி (46), நித்தீஷ்குமார் (18), அசோக்குமார் (24) ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டனர்.
நேற்று காலை கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சென்னை அசோக்நகரைச் சேர்ந்த டேனியல் ஜெயசந்திரன் (25) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 4 மணிக்கு கார் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த அகரம் மேம்பாலத்தின் மீது சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அம்புஜ்குமார், உமேஷ்சாகினி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நித்தீஷ்குமார், அசோக்குமார், டிரைவர் டேனியல் ஜெயசந்திரன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.