செய்திகள்
நெல்லை டவுனில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

நெல்லையில் தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-06 09:30 GMT   |   Update On 2020-08-06 09:30 GMT
நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டியு. இணைப்பு) சார்பில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தகாரர்கள் மூலம் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான தினக்கூலியை ரூ.634-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஒரு கையை இழந்த பெண் தொழிலாளி பாக்கியலட்சுமியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். குரூப் இன்சூரன்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, சாந்தி நகர், மேலப்பாளையம், டவுன், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள 11 மாநகராட்சி வார்டு அலகு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேற்கண்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், தொழிற்சங்கத்தை சேர்ந்த சுடலைராஜ், வரகுணன், பீர்முகமது ஷா, காமராஜ், குழந்தைவேலு, பேரின்பராஜ், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News