செய்திகள்
கலெக்டர் கோவிந்தராவ்

தஞ்சை மாவட்டத்தில் 20,628 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை- கலெக்டர் தகவல்

Published On 2020-08-05 15:52 GMT   |   Update On 2020-08-05 15:52 GMT
தஞ்சை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 628 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000-ஐ அவரவர் வீட்டுக்கே சென்று வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 628 மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நிவாரண உதவித்தொகை பெறாதவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வேறு மாவட்டங்கள், பிற பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தஞ்சை மாவட்டத்தில் வசித்தால் அவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களை தனியாக பதிவு செய்து அவர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். அதன் விவரம் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

உதவித்தொகை பெறும்போது, தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். அது தவிர, ஆதார் அட்டையின் நகல், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையின் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல் மற்றும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளியாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

நிவாரணத்தொகை பெறுவதில் சிரமம் இருந்தால் 9442573315, 04362-236791 ஆகிய எண்களிலும், கிடைக்கவில்லை அல்லது மறுக்கப்பட்டால் மாநில மையத்தை 18004250111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News