செய்திகள்
கோப்புபடம்

பாலக்கோடு அருகே வாலிபர் கொலை: மாமனார் உள்பட 6 பேர் கைது

Published On 2020-08-05 13:31 GMT   |   Update On 2020-08-05 13:31 GMT
பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடைய மாமனார் உள்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்திண்ணை பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவருடைய மகன் விஜய் (வயது 24). பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஞ்சப்பள்ளி அருகே சாலையோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விஜய், பிக்கனஅள்ளியை சேர்ந்த ராஜேஸ்வரி(21) என்ற என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு மாணவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் இருகுடும்பத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு தனது தாய் வீட்டில் இருக்க ராஜேஸ்வரி சம்மதித்தார். 3 மாதம் கழிந்த பின்னர் மனைவியை தனது வீட்டிற்கு விஜய் அழைத்தபோது மேலும் சில மாதங்கள் கழித்து அனுப்பி வைக்கிறோம் என்று ராஜேஸ்வரியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அண்மையில் பெங்களூருவில் இருந்து ஊருக்கு திரும்பிய விஜயை ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ்(46) தன்னுடன் இணைந்து நில விற்பனை தொழிலில் ஈடுபடுமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி வெள்ளிச்சந்தையில் உள்ள முனிராஜின் மாங்காய் மண்டிக்கு விஜய் சென்றுள்ளார். அங்கு விஜயின் மாமனார் முனிராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த வீரமணி (38), ஒட்டர்திண்ணையை சேர்ந்த சித்துராஜ் (29), மகாலிங்கம் (20), சூடப்பட்டியை சேர்ந்த சங்கர்(23), புதுக்கரம்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(30) ஆகியோர் விஜயை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவருடைய உடலை சரக்கு வேனில் ஏற்றி பஞ்சப்பள்ளி அருகே பாரூரான் கொட்டாய் என்ற இடத்தில் வீசி சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த பஞ்சப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன் மற்றும் போலீசார், விஜயின் மாமனார் முனிராஜ் உள்பட 6 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். காதல் திருமண விவகாரத்தில் மாமனாரே மருமகனை அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News