செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2020-08-04 07:22 GMT   |   Update On 2020-08-04 07:22 GMT
பழனி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:

பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கோதைமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக குடிநீர், பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் அறிந்த பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரி மற்றும் ஊராட்சி தலைவர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் கோதைமங்கலத்துக்கான குடிநீர் இணைப்பு குழாய்கள் சேதமடைந்தது. அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவடைந்து மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News