செய்திகள்
பணியில் இருந்தபோது உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதல்வர் பழனிசாமி
காஷ்மீரில் துப்பாக்கி வெடித்த விபத்தில் உயிரிழந்த தமிழக வீரர் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் திருமூர்த்தி (47). இவர் கடந்த 31 வருடங்களாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26-ம் தேதி இரவு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அது வெடித்து, திருமூர்த்தியின் முகத்தில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், காஷ்மீரில் துப்பாக்கி வெடித்த விபத்தில் உயிரிழந்த தமிழக வீரர் திருமூர்த்தியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.