செய்திகள்
மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அய்யலூர் அருகே மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி சிலர் மணல் அள்ளி செல்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி அய்யலூர்-புத்தூர் சாலையில் வைரபிள்ளைபட்டி பிரிவு அருகே நேற்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.