செய்திகள்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கொரோனாவால் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

Published On 2020-07-26 10:57 GMT   |   Update On 2020-07-26 10:57 GMT
கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அருப்புக்கோட்டை போலீஸ்காரரின் குடும்பத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ராமசாமிநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). இவர் அருப்புக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அதற்கான சிகிச்சை பெற்றார். பின்னர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 21-ந்தேதி ஜெயபிரகாஷ் உயிரிழந்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், ராகேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று காலை சித்துராஜபுரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த ஜெயபிரகாஷ் மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை ஜெயபிரகாஷின் மனைவியிடம் வழங்கினார். அப்போது ஜெயசுதா தனது கணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து எனக்கு தெரிய வேண்டும். தனியார் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யும் என்றும், மேலும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள் என்று அமைச்சர் கூறினார். இதையடுத்து ஜெயபிரகாஷின் குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பஞ்சாயத்து தலைவர்கள் லீலாவதி சுப்புராஜ், நாகராஜ், லயன் லட்சுமிநாராயணன், அ.தி.மு.க. பிரமுகர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், கருப்பசாமி, ஆரோக்கியராஜ், சித்துராஜபுரம் பாலாஜி, கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News