செய்திகள்
ரவிசங்கர் குருஜி

ஒரு கோடி மக்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம்- இன்று மாலை ரவிசங்கர் குருஜி நடத்துகிறார்

Published On 2020-07-26 05:47 GMT   |   Update On 2020-07-26 05:47 GMT
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில் இன்று நடைபெற உள்ள கந்த சஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதுடன், கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்த தொடங்கினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வதும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் இன்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு தொடங்குகிறது. வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி நடத்தும் இந்த மெகா பாராயணத்தில், உலகம் முழுவதிலும் வாழும் தமிழ்மொழி பேசும் மக்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளனர்.



மேலும், உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ்ச் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள் என பல்வேறு அமைப்பினர் இந்த கந்த சஷ்டி கவசம் பாராயணத்தில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்கள், பக்தி சேனல்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த மெகா பாராயணத்தில் அதிக அளவிலான மக்களை பங்கேற்க செய்வதற்காகவும், மக்களிடையே கந்த சஷ்டி கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டுவிட்டரில் #WorldCelebratesMurugan #வேலும்மயிலும்துணை என்ற ஹேஷ்டேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News