செய்திகள்
கோப்புபடம்

தேனி அருகே மனைவியின் கள்ளக்காதலன் குத்திக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்

Published On 2020-07-23 14:11 GMT   |   Update On 2020-07-23 14:11 GMT
தேனி அருகே மனைவியின் கள்ளக்காதலனை, தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லிநகரம்:

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 54). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி செல்லமுத்து. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், செல்லமுத்துவுக்கும், தேனி அன்னஞ்சி ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளி ராஜன் (42) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ராஜனுக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகள்களை தாடிச்சேரியில் தங்க வைத்துவிட்டு, வடபுதுப்பட்டியில் செல்லமுத்துவுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாண்டியனுக்கும், ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் பாண்டியன், தனது வீட்டின் அருகே நடந்து வந்த ராஜனுடன் தகராறு செய்தார். அப்போது அவர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ராஜனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதை பார்த்ததும் செல்லமுத்து மற்றும் அவருடைய தாய் இருளாயி ஆகியோர் சேர்ந்து பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரும் காயம் அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார். பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜனின் அண்ணன் முருகன் கொடுத்த புகாரின் பேரில், பாண்டியன் மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News