செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Published On 2020-07-19 07:24 GMT   |   Update On 2020-07-19 07:24 GMT
திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 24 மணி நேரத்தில்  நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர்,  காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும்  குமரிக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவுபகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் வரும் 23-ந்தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News