செய்திகள்
கோப்புபடம்

அலங்காநல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நாளை கடையடைப்பு

Published On 2020-07-16 13:19 GMT   |   Update On 2020-07-16 13:19 GMT
அலங்காநல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நாளை கடையடைப்பு நடத்த கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அலங்காநல்லூர்:

மதுரை மாநகராட்சி மற்றும் சில பகுதிகளில் முழு ஊரடங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 14-ந் தேதி வரை அமலில் இருந்தது. இந்த கால கட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இங்கு மூடப்பட்டன. இதையொட்டி மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் உள்ளதை அறிந்த மதுபிரியர்கள் இங்கு வந்து குவியத்தொடங்கினர். அலங்காநல்லூர் ஒன்றிய பகுதி முழு ஊரடங்கில் சேர்க்கப்படாததால் இங்கு மதுக்கடைகள் உள்ளிட்ட பிற கடைகளும் திறந்திருந்தன.

இதன் காரணமாக கொரோனா தொற்று அலங்காநல்லூர் பகுதியில் பரவி வருவதாலும், மக்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்கின்ற 3 டாஸ்மாக் கடைகளையும், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையையும் சேர்த்து மூட வேண்டும் என ஏற்கனவே மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கிராமத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று அலங்காநல்லூரில் கிராம கமிட்டி கூட்டம் அங்குள்ள மந்தைதிடலில் நடந்தது. இதில் நாளை(வெள்ளிக்கிழமை) ஒட்டு மொத்தமாக அலங்காநல்லூரில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. அதன்படி நாளை முழு கடை அடைப்பு நடைபெறும்.
Tags:    

Similar News