செய்திகள்
பட்டுக்கோட்டையில் கொரோனாவுக்கு, அரிசி வியாபாரி பலி
பட்டுக்கோட்டையில், கொரோனாவுக்கு அரிசி வியாபாரி பலியானார்.
பட்டுக்கோட்டை:
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
அதேநேரத்தில் சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் பிற மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
அரிசி வியாபாரி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்து தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 74 வயதான அரிசி வியாபாரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.