செய்திகள்
வடமதுரை அருகே விவசாயியை மிரட்டிய வாலிபர் கைது
வடமதுரை அருகே விவசாயியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரையை அடுத்த சித்துவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே உள்ள காட்டாற்று ஓடையில் மணல் அள்ளுவதற்கு வேங்கனூரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 32) டிராக்டருடன் வந்தார். இதேபோல் சிலர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். இதனைக்கண்ட சவுக்கத்அலி அவர்களை மணல் அள்ள விடாமல் தடுத்து ஓட, ஓட விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு டிராக்டருடன் தப்பி சென்று விட்டனர். மேலும் சவுக்கத் அலிக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சவுக்கத் அலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.