செய்திகள்
குந்தாரப்பள்ளியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
குந்தாரப்பள்ளியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி அசோசியேசன் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை அமலில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டதால், இதுவரை பள்ளி வாகனங்கள் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் ஒரு லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கால் இவர்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை கட்டணம், இன்சூரன்ஸ், எப்.சி., ஆகியவற்றை கட்ட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காமல், எப்போது பள்ளிகள் திறக்கும் என்றும் தெரியாமல், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் உள்ளதால், தனியார் பள்ளி நிர்வாகிகள் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு செப்டம்பர் மாதம் வரை வரி கட்ட விலக்கு அளித்துள்ளது. ஆனால், மாநில அரசு வரியை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவது வேதனை அளிக்கிறது. எனவே, இயங்காத வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, சரஸ்வதி வித்யாலயா பள்ளி நிர்வாகி அன்பரசு உள்ளிட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் உடனிருந்தனர்.