செய்திகள்
கோப்புப்படம்

ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்க சென்ற கொரோனா பாதிப்புக்குள்ளான பெரியவர்

Published On 2020-07-15 06:23 GMT   |   Update On 2020-07-15 06:23 GMT
கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர் ஒருவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடி:

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824?ஐ தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 200க்கும்மேற்பட்ட பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் புளியங்குடியில் 40 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழைய மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஒரு பெரியவருக்கும், இரு பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களை அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையில் காத்திருக்க, தங்களுக்கு தேவையான உடமைகளை பைகளில் எடுத்துக் கொண்டு 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். அவர்களுடன் காவலர் ஒருவரும் சென்றார்.

இதில் கடைசியாக கட்டை பையை தூக்கிக் கொண்டு சென்ற பெரியவர், ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்ததோடு உடன் வந்த காவலரை தனது கட்டை பைக்கு காவலாக நிறுத்தி விட்டு அருகில் இருந்த மிட்டாய்க்கடைக்கு சென்றார். அங்கு பக்கோடாவை பெரிய பார்சலாக கட்டி வாங்கிக் கொண்டு தனது பையில் பத்திரமாக வைத்தார்.

இதனை உடன் வந்த சுகாதார அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மிட்டாய் கடை அருகில் நின்ற பொதுமக்களும் சர்வசாதாரணமாக பெரியவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்தனர். ஒருவர் பெரியவர் கீழே தவறவிட்ட பைசாவை எடுத்து அவரிடம் வழங்கினார். இதில் ஒரே ஆறுதல் பெரியவர் கையில் கையுறை அணிந்திருந்ததும், அருகில் நின்ற அனைவருமே முக கவசம் அணிந்திருந்ததும் தான்.

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், வீட்டிலிருக்கவும், தனித்திருக்கவும் அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெரியவர், ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கிச் சென்ற சம்பவம் அலட்சியத்திற்கு சாட்சியாக பார்க்கப்படுகின்றது.
Tags:    

Similar News