செய்திகள்
கொரோனா வைரஸ்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவை- மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

Published On 2020-07-14 11:48 GMT   |   Update On 2020-07-14 11:48 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-ஐ தாண்டி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் பரவலை தடுக்க 57 இடங்களை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. நகர் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்ட இப்பகுதிகளில் கொரோனா நோய் கட்டுப்படும் வரை மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக செயல்பாடுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பு, நோய் கட்டுப்படும் வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் மாவட்டம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள பல நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டரின் விவசாய பிரிவு நேர்முக உதவியாளர் இப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போதிலும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள 57 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை 4 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனியாக ஒரு துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒருவரை நியமித்து இப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் பணிகள் தொய்வின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும். இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே மாவட்ட நிர்வாகம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும், நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க 4 சிறப்பு அதிகாரிகளை நியமித்திட வேண்டும். மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்தி நோய் பரவலை முற்றிலுமாக தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு முடிவுகளையும் விரைந்து அறிவித்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
Tags:    

Similar News