செய்திகள்
மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி

வேலை தேடுபவர்கள், வேலை அளிப்போர்களுக்கு தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைய சேவையை பயன்படுத்த வசதி

Published On 2020-07-14 11:02 GMT   |   Update On 2020-07-14 11:02 GMT
வேலை தேடுபவர்கள், வேலை அளிப்போர்களுக்கு தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” என்ற இணையதளம் தமிழக முதல்-அமைச்சரால் 16.6.20-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்கள் கல்வி தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்துச் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை பதிவேற்றம் செய்து, காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் வழங்குவதற்கும் இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.

வேலை அளிப்போர், வேலை நாடுபர்களுக்கு இச்சேவை, கட்டணம் எதுவுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாறாக தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணைய வழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணையவழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலை அளிப்போர்கள் பணிவாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கி தரப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இச்சேவையை வேலை தேடுபவர்களும், வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News