செய்திகள்
சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனுவை போட்ட போது எட

கொரோனா அச்சுறுத்தல் : கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்த புகார் பெட்டி

Published On 2020-07-14 10:45 GMT   |   Update On 2020-07-14 10:45 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் புகார் மனுக்களை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெறுவதை அதிகாரிகள் தவிர்த்து புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு புகார் பெட்டி மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் பெறும் பெட்டி தற்போது அலுவலக நுழைவாயிலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் இனிமேல் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் மனுக்கள் பெறும் பெட்டியில் புகார் மனுவை போடுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி நேற்று கலெக்டர் அலுவலத்துக்கு புகார் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் நேரடியாக மக்களை சந்தித்து புகார் மனுக்கள் பெற்ற நிலை மாறி தற்போது நுழைவுவாயில் முன்பே புகார் பெட்டியில் மனுக்களை போடும் அளவிற்கு கொரோனாவின் அச்சுறுத்தல் மாவட்டத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News