செய்திகள்
சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Published On 2020-07-13 15:02 GMT   |   Update On 2020-07-13 15:02 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியான கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை அதே இடத்தில் கீழே கொட்டி வனத்துறையினர் அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது.

இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி அதனை சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன்மலையில் உள்ள சின்னதிருப்பதி, பள்ளிப்பாடி, மணியார்பாளையம், கர்ணாம்பட்டு, நாராயணபட்டி, எருக்கம்பட்டு ஆகிய பகுதிகளில் வனச்சரகர் ராஜா, வனவர்கள் முருகன், ஆனந்த், காப்பாளர் தணிகாசலம் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் மணியார்பாளையம், கர்ணாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த சாராய ஊறலை அதே இடத்தில் கீழே கொட்டி வனத்துறையினர் அழித்தனர்.
Tags:    

Similar News