செய்திகள்
பாறைகளின் இடுக்கில் சிக்கிய சிறுவன்

செல்போனை எடுக்க முயன்றபோது பாறைகளின் இடுக்கில் சிக்கிய சிறுவன் - 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு

Published On 2020-07-13 13:12 GMT   |   Update On 2020-07-13 13:12 GMT
தா.பேட்டை அருகே பாறைகளின் இடுக்கில் தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, சிறுவன் ஒருவன் பாறைகளின் இடுக்கில் சிக்கி கொண்டான். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள மேலகொத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. விவசாயி. இவரது மகன் ஆதித்யா (வயது 12). இவன், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு தற்போது பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால், சிறுவன் ஆதித்யா அருகில் வசிக்கும் சிறுவர்களுடன் கிராமத்தின் அருகே உள்ள சிறிய மலைஅடிவார பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக நேற்று சென்றான். அப்போது, மலைகுன்றின்மேல் சிறுவன் சென்றபோது உடன்வந்த சிறுமி ரமணி வைத்திருந்த செல்போனை வாங்கி பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த செல்போன் கை தவறி பாறைகளின் இடுக்கில் விழுந்தது.

இதனால், அதிர்ச்சிஅடைந்த சிறுவன் பாறை இடுக்குகளுக்குள் இறங்கி படுத்துக் கொண்டே அதனை எடுக்க முயற்சி செய்தான். அப்போது பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டான். இதனால், வெளியே வர முடியாமல் தன்னை காப்பாற்றும்படி அலறினான். இதனை பார்த்த சிறுமி ரமணி ஓடிச்சென்று அருகில் இருந்தவர்களை அழைத்து வந்தாள். தகவலறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பின்னர், துறையூர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசாருருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மநாதன், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் முகமதுரபீக் மற்றும் போலீசாரும் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். பின்னர் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மேலகொத்தம்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News