செய்திகள்
விபத்து

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலி

Published On 2020-07-12 11:50 GMT   |   Update On 2020-07-12 11:50 GMT
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, லாரி மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவரது மகன் விக்னேஷ் (20). கண்ணன் தனது மகன் விக்னேசுடன் காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே சென்ற போது, எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த கண்ணன், ரத்த வெள்ளத்தில் மகன் கண் முன்னே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

விக்னேஷ், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News