செய்திகள்
கமுதி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்
கமுதி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கமுதி:
கமுதி பகுதியில் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் வசித்த பகுதிகள் மற்றும் குடும்பத்தினரை கூட சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்யவில்லை. கமுதி தாலுகாவில் உள்ள பேரையூர் வட்டார மருத்துவ அலுவலகத்தில் 2 டாக்டர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையம் 10 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து பலர் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அலட்சியமாக வெளியில் சுற்றித்திரிகின்றனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.