செய்திகள்
தற்கொலை

ஊரடங்கால் வாட்டிய வறுமை : ஆட்டோ டிரைவர், மனைவியுடன் தற்கொலை

Published On 2020-07-09 14:46 GMT   |   Update On 2020-07-09 14:46 GMT
ஊரடங்கால் வறுமையில் வாடிய ஆட்டோ டிரைவர், தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஜோசப்காலனியை சேர்ந்தவர் மோகன் (வயது 56). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜயா (51). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் மோகன், விஜயா ஆகியோர் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் மோகனால் ஆட்டோ சவாரிக்கு செல்ல முடியவில்லை. இதனால் வறுமை அவரது குடும்பத்தை மிகவும் வாட்டியது. மேலும் கடன் பிரச்சினையால் அவர் தவித்தார். இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன், தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதற்கு முன்னதாக என்.எஸ்.நகரில் வசித்து வரும் தனது தம்பி வீரமணிக்கு, நேற்று மாலை மோகன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தம்பியிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் பதறிப்போன வீரமணி, தனது அண்ணனை சமாதானப்படுத்த முயன்றார். அதற்குள் மோகன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து வீரமணி, தனது அண்ணன் மோகன் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு மோகன், மனைவி விஜயா ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து வீரமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் கொய்யாப்பழம் வெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தான் கொய்யாப்பழத்தில் விஷத்தை வைத்து 2 பேரும் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் வீட்டை சோதனையிட்ட போது மோகன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் கடன் பிரச்சினையால் தற்கொலை முடிவு எடுத்ததாக எழுதி இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவர், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News