செய்திகள்
பெண் கொலை

புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவர்-மாமியார்

Published On 2020-07-08 14:53 GMT   |   Update On 2020-07-08 14:53 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவரை கைது செய்த போலீசார் மாமியாரை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் கவுசல்யா கடந்த 4-ந் தேதி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கவுசல்யாவின் பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பெரியகுளம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகாவும் விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கவுசல்யாவின் கணவர் கவுதமை பிடித்து பெரியகுளம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது கவுசல்யாவிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவர் கவுதமும், மாமியார் சாந்தியும் அடித்து கொலை செய்தது அம்பலமானது.

பின்னர் கொலையை மறைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்ப வைப்பதற்காக அவர்கள் 2 பேரும் கவுசல்யாவின் உடலை தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கவுதமை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சாந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News