செய்திகள்
மாரியம்மாள்

அரசு மகளிர் கலைக்கல்லூரி கொரோனா தனிமை வார்டில் பெண் தற்கொலை

Published On 2020-07-07 07:10 GMT   |   Update On 2020-07-07 07:10 GMT
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை வார்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னங்குறிச்சி:

சேலம் கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உறவினரான மூணாங்கரடு ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த குமார் என்பவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 40) உள்பட சிலர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கடந்த 30-ந் தேதி தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்த பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் மாரியம்மாளிடமும், அவரது உறவினர்களிடமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாரியம்மாள் நேற்று அதிகாலை தனிமைவார்டில் உள்ள் ஒரு அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், மாரியம்மாளுக்கு எந்த நோயும் கிடையாது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் ஆஸ்பத்திரிக்கு தான் அழைத்து சென்று இருக்க வேண்டும். அவர்களுக்கு இங்கு என்ன பாதுகாப்பு உள்ளது? என்றுக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News