செய்திகள்
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருக்கழுக்குன்றத்தில் 5 சென்டி மீட்டர், கேளம்பாக்கம், வந்தவாசி, மதுராந்தகத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
மத்திய வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.