செய்திகள்
‘டிரோன்’ மூலம் சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளித்து பரிசோதனை

Published On 2020-07-04 03:49 GMT   |   Update On 2020-07-04 03:49 GMT
சென்னையில் முதல் தடவையாக இயற்கை முறையிலான கிருமி நாசினி ஆளில்லா விமானம் மூலம் தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கிருமி நாசினி மனிதர்கள் மீது பட்டாலும் பக்க விளைவுகள் கிடையாது.
சென்னை:

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக அளவில் கொரோனா தாக்கம் உள்ள இடங்களில் ராட்சத எந்திரங்கள், தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி சென்னை திரு.வி.க. நகர் மண்டலப் பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் தெளிக்கப்பட்டு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று ராயபுரம் மண்டல பகுதிகளில் தெளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பரிசோதனைக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணை அமைப்பான ‘தக்‌ஷா’வும் துணை நிற்கின்றன. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானங்கள் மூலம் ‘தக்‌ஷா’ அமைப்பினர் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ‘தக்‌ஷா’ அமைப்பின் செயல் அதிகாரி என்.ராமநாதன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் 20 நானோ மைக்ரான் எடை அளவு கொண்டது என்று ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெரிவித்து உள்ளனர். எனவே, ஏ.சி. போடப்பட்ட அறைகளில் இது காற்றில் அப்படியே உலாவுவதால் எளிதில் மற்றவர்களுக்கு பரவுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் 4-வது மாடியில் இருக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இருந்தால், அவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிவரும் கிருமியானது 5 மணி நேரம் வரை காற்றில் நிற்கும் தன்மை கொண்டது.

ராட்சத எந்திரங்கள் மூலம் 600-க்கும் மேற்பட்ட மைக்ரான் எடை அளவில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதால் அவை உடனடியாக தரையில் விழுந்துவிடுவதால் காற்றில் பரவி நிற்கும் கொரோனா வைரசை அழிப்பது சிரமம்.

அதே நேரத்தில் எங்களது ஆளில்லா விமானத்தின் ‘அல்ட்ரா லோ வால்யூம்’ மூலம் புகை போன்று 50 முதல் 80 மைக்ரான் அளவில் தெளிப்பதால் கிருமி நாசினியும் காற்றில் 3 மணி பறப்பதுடன் 10 முதல் 12 வினாடிகளில் கொரோனா வைரசை அழிக்கவும் முடியும். ‘அல்ட்ரா லோ வால்யூம்’ முறையானது அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ஆளில்லா விமானங்களில் மட்டுமே பயன்படுத்தும் முறையாகும்.

மேலும், இந்த கிருமிநாசினியானது, வீடுகளின் சமையல் அறையில் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகளின்மீது அறைக்கப்பட்ட ஆரஞ்சு விழுதுகளை பரப்பி 90 நாட்களுக்கு அதை பதப்படுத்தி மேலும் சில இயற்கை பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்டது ஆகும். எனவே, இந்த கிருமிநாசினி முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதால் மனிதர்கள் மீது பட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்துவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News