செய்திகள்
தமிழரசன்

சூளகிரி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு

Published On 2020-07-03 14:03 GMT   |   Update On 2020-07-03 14:03 GMT
சூளகிரி அருகே அக்காளின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் கல்லூரி மாணவர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் அன்பரசு. இளைய மகன் தமிழரசன் (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

தமிழரசனின் அக்காள் அமுதாவிற்கு நேற்று காலை 5 மணிக்கு ராமாபுரத்தில் உள்ள பசவண்ணா கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின் தமிழரசன் தனது மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அலகுபாவி கிராமத்திலிருந்து சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அக்காளின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில், தம்பி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News