செய்திகள்
வைகோ

ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி கால கடன்- வைகோ வேண்டுகோள்

Published On 2020-07-03 09:06 GMT   |   Update On 2020-07-03 09:06 GMT
ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்கள் நெருக்கடி காலக்கடன்கள் பெறுவதற்கான வரையறையின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்பதற்கும், புதியகடன் வழங்குவதற்கும் மத்திய அரசு அறிவித்துள்ள உதவிகள் ஆயத்த ஆடைத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. எனினும், நெருக்கடி காலக் கடன் குறித்து ஆயத்த ஆடைகள் தொழில் முனைவோர் தெரிவித்து இருக்கின்ற சில கருத்துகளை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

29.2.2020 அன்று, ரூ.25 கோடிக்கும் குறைவான கடன் நிலுவையும், 2019-20-ம்ஆண்டில் ரூ.100 கோடிக்கும் குறைவாக வணிக வரவு-செலவு செய்யும் நிறுவனங்கள் புதிய கடன் உதவி பெற தகுதி பெற்றவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. 26.6.2020 அன்று மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை, நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு-செலவு கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவித்து இருக்கின்ற நெருக்கடி காலக்கடன்கள் பெறுவதற்கான வரையறையின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும். இதன்மூலம் ஆயத்த ஆடைகள் தொழிலையும், அந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News