செய்திகள்
தமிழக அரசு

கோவில், தேவாலயங்கள், மசூதிகளுக்கு கட்டுப்பாடு- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-07-03 02:37 GMT   |   Update On 2020-07-03 02:37 GMT
ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில் நுழைவுவாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், தரமான கிருமி நாசினியை பக்தர்களுக்கும் கொடுத்து கைகளை சுத்தம் செய்து, கால்களை கழவிய பின்னரே அனுமதிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்கள், இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது.

கோவில்களில் அங்கப்பிரதட்சணம் அனுமதிக்க கூடாது. பிரசாதங்கள் வினியோகம் செய்ய வேண்டாம். தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதிக்க வேண்டாம். விபூதி கையில் படும் வகையில் வழங்க கூடாது.

ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்ளும் விதமாக கை குலுக்குதல் போன்ற உடல்ரீதியான தொடர்பை தவிர்க்க வேண்டும். நோய் தொற்று குறித்து துண்டு பிரசுரங்கள், சுவரெட்டிகள், ஒளி, ஒலி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டும்.

அதேபோல் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோயாளிகள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வருவதை தவிர்க்க அறிவுரை கூற வேண்டும்.

கோவிலில் சமூக இடைவெளியை பராமரிக்க தரையில் வட்டங்கள் வரைய வேண்டும். உள்ளே, வெளியே செல்லும் வாசல்கள் தவிர்த்து மீதம் உள்ளவற்றை மூட வேண்டும். திருமடப்பள்ளி, அன்னதானக்கூட பணியாளர்கள் உணவு தயார் செய்யும் போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

கோவிலின் தரைப்பகுதியை தினசரி பல முறை தூய்மை செய்ய வேண்டும். கோவில்களில் குளிர்சாதனக் கருவிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவில்களில் திருமணங்கள் நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில், 50 நபர்களுக்கு மேற்படாமல் நடத்த வேண்டும்.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருமாறு:-

குறிப்பாக ஒவ்வொருவருக்கு இடையே 2 மீட்டர் (6 அடி) இடைவெளி விட்டு ஆலய வழிபாட்டில் பங்கேற்க வேண்டும். 100 சதுர மீட்டர் அல்லது 1,075 சதுர அடி பரப்பளவில் 20 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கேற்றப்படி பக்தர்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும்.

ஆலயங்களுக்கு வருவோருக்கு பூ போன்ற பொருட்களை வழங்கக் கூடாது. ஆலயமணி மற்றும் வேறு பொருட்களை பக்தர்கள் யாரும் தொடக்கூடாது. வழிபாட்டு முறை, துதிப்பாடல்கள் ஆகியவற்றுக்கான புத்தகங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பாடகர் குழு பாடல்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக பதிவு செய்யப்பட்ட இசை, பாடல்களை ஒலிபரப்பலாம்.

நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற உடலை தொடக்கூடிய அனைத்து மத வழிபாட்டு முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஆலய வளாகத்தில் திருமணம் நடந்தால் அதில் 50 பேருக்கு மேல் பங்கேற்றக்கூடாது. பங்கேற்போர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு திருமணம் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில், அதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வழிபாடுகள் முடிந்த பிறகு ஆலய வளாகத்தில் பக்தர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும். ஆராதனை முடிந்ததும் பக்தர்கள் அனைவரும் வளாகத்தைவிட்டு வெளியேறுவதை ஆலய நிர்வாகிகள் உறுதி செய்யவேண்டும்.

மசூதிக்கு தொழுகைக்கு வருபவர்கள் தோளோடு தோள் சேர்த்து நெருக்கமாக நின்று பிரார்த்தனை செய்யக்கூடாது. சமூக இடைவெளியுடன் அவர்கள் பிரார்த்தனை செய்தவற்கு ஏற்ப தொழுகை கூடங்களில் பெயிண்ட் மூலம் வட்டம் அல்லது சதுரம் அல்லது வரிசை கோடுகள் போடப்பட வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரையில் மசூதிகளில் கூட்டங்கள் நடத்துவது, மதராசாக்கள் அல்லது ஆன்மிக வகுப்புகள் நடத்துவது கூடாது. மசூதிகளில் கூட்டமாக அமர்ந்து புனித நூல்களை படிப்பது, குழுக்களாக அமர்ந்து விவாதம் செய்வது போன்றவற்றை அனுமதிக்க கூடாது.

தர்காக்களில் புனித பீடம் இருக்கும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். தர்காவில் உள்ள புனித பீடத்திற்கு அலங்கார துணிகள் மற்றும் மலர் போர்வைகள், பூக்கள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்த அனுமதிக்கக் கூடாது. தர்கா வளாகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்ற பகுதிகளில் 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசல் தெளிக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை செய்ய வேண்டும்.

இதேபோன்று சீக்கிய மத வழிபாட்டுக்கான இடங்களான குருத்வார், புத்த விஹார், சமணர்கள், பார்சி மத இடங்கள், ஜெயின் வழிப்பாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News