செய்திகள்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள்- வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற்பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.