செய்திகள்
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்- மு.க.ஸ்டாலின் மருத்துவர் தின வாழ்த்து
பொதுநலனும், கருணை உணர்வும் மிக்க மனிதசேவைத் தொழில் தான் மருத்துவம், இதனை இன்று உலகம் உணர்ந்துவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மருத்துவர் தின வாழ்த்துச் செய்தி வருமாறு:-
தன்னுயிரைப் பற்றி மட்டுமே கவலைப்படும் பெரும்பான்மை மனிதர்களுக்கிடையே, பிறர் உயிர் வாழ்தலைப் பற்றியும் கவலைகொள்பவர்கள் மருத்துவர்கள். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை!
பொதுநலனும், கருணை உணர்வும் மிக்க மனிதசேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை இன்று உலகம் உணர்ந்துவிட்டது. இன்று உலகமே மருத்துவர்களை மட்டும்தான் நம்பி இருக்கிறது. கொரோனா என்ற நோய்த்தொற்று பரவி மனித சமுதாயத்தை மிரள வைத்துள்ள நிலையில் அதற்கு அஞ்சாமல் போராடுபவர்கள் மருத்துவர்கள்.
இந்தப் பூமிப்பந்தைத் தனது சேவை உள்ளத்தால் உயிர்ப்பித்துக் கொண்டு இருப்பவர்கள் மருத்துவர்கள். ஒவ்வொரு மனிதனின் உயிருக்குப் பின்னே, உடல்நலத்துக்குப் பின்னே, மகிழ்ச்சிக்குப் பின்னே இருப்பவர்கள் மருத்துவர்கள் தான்.
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்! மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.