செய்திகள்
வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடக்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய கர்நாடகா கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.