செய்திகள்
ராமேசுவரம், ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழையால் சாலையில் நின்ற மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைகாற்றுடன் மழை

Published On 2020-06-26 07:51 GMT   |   Update On 2020-06-26 07:51 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் மக்களைவாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திர வெயிலுக்கு ஈடாக கடும் வெப்பக்காற்று வீசியதால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறை காற்று வீசியது.

வெப்பக்காற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக கடும் சூறை காற்று வீசிய நிலையில் தொடர்ந்து நல்ல மழை பெய்தது. அடைமழையாக இல்லாமல் சாரல் மழையாக பெய்தாலும் இடைவிடாமல் ½ மணிநேரம் பெய்த மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. ராமநாதபுரம், ராமேசுவரம், கமுதி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் வீசிய இந்த சூறை காற்று காரணமாக பல பகுதிகளில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பல பகுதிகளில் விடிய விடிய மின்தடை நீடித்ததால் மக்கள் இருளில் அவதிஅடைந்தனர். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

கடலாடி 72.2, வாலிநோக்கம்-35.3, கமுதி- 62.2, பள்ளமோர்குளம்-5, முதுகுளத்தூர் -14, பரமக்குடி -13.4, மண்டபம்-32.8, ராமநாதபுரம்-23, பாம்பன்-37.7, ராமேசுவரம்-62.2, தங்கச்சிமடம்-34.3, ஆர்.எஸ்.மங்கலம்-90, தீர்த்தாண்டதானம்-56, திருவாடானை-57.4, தொண்டி-37.1, வட்டாணம்-67. சராசரி மழை அளவு- 43.73.
Tags:    

Similar News