செய்திகள்
அம்மன் அர்ச்சுனன் எம்எல்ஏ

மக்கள் வெறுக்கும் வகையில் அரசியல் நடத்துவது திமுக தான்- அர்ச்சுனன் எம்எல்ஏ

Published On 2020-06-22 10:54 GMT   |   Update On 2020-06-22 12:19 GMT
மக்கள் வெறுக்கும் வகையில் அரசியல் நடத்துவது திமுக தான் என்று கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு அம்மன் அர்ச்சுனன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை:

கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தியும், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியும், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் அனைத்து உதவிகளையும் செய்து இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.

ஆனால், ஆட்சி அதிகாரபசியால், மக்கள் எந்த நிலையில் உள்ளார்கள், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, சிங்காநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ., நா.கார்த்திக், அவர் சார்ந்த இயக்கமான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை போலவே செயல்பட்டு வருகிறார்.

மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரின் பணியை பாராட்டாவிட்டாலும் கூட மனித நேயமின்றி, கொரோனா பேரிடர் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், வெற்று அறிக்கைகளை வெளியிட்டு தனது தலைமையை திருப்திப்படுத்த வேண்டி, மக்கள் வெறுக்கும் வகையில் அறிக்கை வாயிலாக புலம்பி வருகிறார்.

உள்ளாட்சித் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா தொற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை என கவலை தெரிவிக்கும் வகையில் கேட்பதை விடுத்து, வீதி வீதியாக சென்று மக்கள் பணி செய்தும், சென்னை, கோவை, நீலகிரி என நெடுந்தூரம் பயணங்களை கண்துஞ்சாமல் மேற்கொண்டு, கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்கள் நலப்பணிகளிலும், பங்கேற்பதை, சரிதானா? என கேள்வி எழுப்புகிறார்.

கோவை மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில், மாவட்டத்திற்கும், மாவட்ட மக்களுக்கும் இன்னும் 2 தலைமுறைகள் கடந்து, என்ன தேவை என்பதை சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு, திட்டங்களை கேட்டுப்பெற்று நிறைவேற்றி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பார்த்து கேள்வி எழுப்ப ந.கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு தகுதி உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிக்கென எதையுமே செய்யாமல், அமைச்சரை பார்த்து அவர் கேள்வி கேட்கிறார்.

கோவையில் இருந்து சென்னை செல்லும் போதும் சரி, சென்னையிலிருந்து கோவை திரும்பும் போதும் சரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா பரிசோதனை செய்து கொள்வதோடு, கொரோனா தொற்று ஒழிப்பில், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கொங்கு மாவட்டங்களில் நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றை வளப்படுத்த வேண்டி ரூ.250 கோடியில் நொய்யல் புனரமைப்பு திட்டத்தை முதல்-அமைச்சரிடம் கேட்டுப் பெற்று, இடைவிடாத பணிகளுக்கு இடையே பூமி பூஜை செய்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் மழை வெள்ளத்தால், பாதிப்பு ஏற்படாத வகையில் தூர்வாரும் பணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதை கொச்சைப்படுத்தும் வகையில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டு வருகிறார். எனவே மக்கள் வெறுக்கும் வகையில் அரசியல் நடத்துவது தி.மு.க. தான். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News