செய்திகள்
வானிலை நிலவரம்

கோவை, நீலகிரி, தேனியில் மழை- 6 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு

Published On 2020-06-19 08:40 GMT   |   Update On 2020-06-19 08:40 GMT
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்‌ தெரிவித்துள்ளது‌.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாக கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவாலா, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 3 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கோவை மாவட்டம் சோலையாறில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை , தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மேற்கொண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News