செய்திகள்
நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரை படத்தில் காணலாம்.

சேலத்தில் துப்பாக்கி முனையில் நகைக்கடை அதிபரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு

Published On 2020-06-18 10:36 GMT   |   Update On 2020-06-18 10:36 GMT
சேலத்தில் துப்பாக்கி முனையில் நகைக்கடை அதிபரிடம் ரூ.6½ லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் பழைய நகைகளை வீட்டுக்கே சென்று வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபேட்டை ராஜகணபதி நகரை சேர்ந்த தனசேகரன் (35) என்பவர் 5 பவுன் நகையை விற்பனை செய்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தன்னிடம் 20 பவுன் நகை இருப்பதாக நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன்(40) மூலம் கார்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் தனசேகரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவருடைய வீட்டில் ஏற்கனவே 4 பேர் இருந்தனர். இதையடுத்து தனசேகரன் முதலில் பணத்தை கொடுக்குமாறு கார்த்திக்கிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நகைகளை கொடுக்குமாறு கூறினார்.

அப்போது திடீரென தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கார்த்திக்கின் தலையில் சுத்தியலால் பலமாக தாக்கினர். மணிகண்டனை கைகளால் தாக்கினர். மேலும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கார்த்திக்கிடம் இருந்து ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்தை பறித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தால் உங்களின் குடும்பத்தைக் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டி அவர்களை வீட்டில் இருந்து அனுப்பினர்.

அதன்பிறகு தனசேகரனும், அவரது நண்பர்களும் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து தலையில் காயமடைந்த கார்த்திக் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது தனசேகரன் மற்றும் அவரது நண்பர்களான அம்மாபேட்டை வரதய்யர் தெருவைச் சேர்ந்த சேகர் (36), பார்த்தசாரதி (38), மணியனூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (38), மணிகண்டன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் செந்தில் விசாரணை நடத்தினார். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வேறு யாரையாவது இதுபோன்று மிரட்டி பணம் பறித்தார்களா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News