செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகம், புதுவையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2020-06-17 07:25 GMT   |   Update On 2020-06-17 07:25 GMT
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வளத்தியில் (விழுப்புரம்) 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.  வால்வாறை, சின்னகல்லாரில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வடக்கு கேரளா, கர்நாடகா மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். வடக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 21ம் தேதி வரையும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் 19ம் தேதி வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News