செய்திகள்
நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்

Published On 2020-06-17 05:10 GMT   |   Update On 2020-06-17 05:10 GMT
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET-2020 போட்டித் தேர்வுவுக்கான இணையதள (Online) பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார்கள்.

NEET போன்ற போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவியர் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல், உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனித்துவம் மிக்க பயிற்சி அளிக்கும் திட்டத்தினை 13.11.2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்கள். ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் போட்டித் தேர்விற்கான பயிற்சியை அளித்திடும் வகையில், NEET-2020 போட்டித் தேர்வுக்கான இணையதள (Online) கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட Amphisoft Technologies (E-box) நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சியினை பெற இதுவரை 7,420 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

Amphisoft Technologies நிறுவனத்தால் இணையதளம் மூலமாக, ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா 1 மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சியும், பயிற்சி முடித்தவுடன் அன்றைய தினமே ஒவ்வொரு பாடத்திற்கும் 1 மணி நேரம் வீதம், 4 மணி நேரம் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும், 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரரித் தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News