செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Published On 2020-06-12 10:20 GMT   |   Update On 2020-06-12 10:20 GMT
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேவலாவில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆம்பூர் மற்றும் கூடலூர் பஜாரில் தலா 4 செமீ, வால்பாறை, போளூரில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, இன்று ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதேபோல் இன்று முதல் 16ம்தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 3 முதல் 3.4 மீட்டர் உயரத்தில் எழும்பக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News