செய்திகள்
கைது

பெரணமல்லூர் அருகே பெண்ணின் திருமணத்தை தடுத்த வாலிபர் கைது

Published On 2020-06-11 13:09 GMT   |   Update On 2020-06-11 13:09 GMT
பெரணமல்லூர் அருகே பெண்ணின் திருமணத்தை தடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அவரை 3 இடங்களில் இருந்து வந்து பெண் பார்த்து விட்டு சென்று விட்டனர். மாப்பிள்ளை வீட்டில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில் இருந்து அந்த பெண் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது சேத்துப்பட்டு அருகே உள்ள ஒதலவாடி கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை ஒருவர் வந்து அவரை பார்த்து விட்டு நாங்கள் ஊருக்கு சென்று தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றனர்.

விநாயகபுரத்தில் உள்ள ராம்கி (30) என்பவர் ஒதலவாடியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தவறான தகவல்களை கொடுத்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் முன்பு பெண் பார்த்து விட்டு சென்ற 3 பேரின் வீட்டிலும் அவர் தவறான தகவல் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

அதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்தார்.
Tags:    

Similar News