செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-06-09 06:57 GMT   |   Update On 2020-06-09 07:29 GMT
தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று வெளியான தகவல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி.  நிலுலையில் உள்ள 11-ம்  வகுப்பு தேர்வும் ரத்து. எஞ்சியுள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News