செய்திகள்
கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்

Published On 2020-06-08 14:15 GMT   |   Update On 2020-06-08 14:15 GMT
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், வள்ளம் மற்றும் கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 10 முதல் 15அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்தது.

அலைகள் ஆக்ரோ‌ஷமாக பாறைகள் மீது மோதியது. கடல் சீற்றம் காரணமாக முக்கடல் சங்க மிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக படித்துறை அமைக்கும் பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

கன்னியாகுமரி பகுதியில் 2-வது நாளாக இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பாறைகளில் அலைமோதும் போது கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை மறைக்கும் வகையில் கடல் அலை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.

இதே போல் சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்ளிட்ட கிராமங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆகவே அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், வள்ளம் மற்றும் கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சூரிய உதயம் தென்படவில்லை.
Tags:    

Similar News